கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் பூவத்தி அருகே நேற்று காலை சாலையோரம் கருகிய நிலையில் இரு வேறு இடங்களில் இருவர் உடல்கள் மீட்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் விசாரணையில் எரித்து கொலை செய்யப்பட்டது கிருஷ்ணகிரி அருகே பாலகுறி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார் மற்றும் அவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் செல்லப்பன் என்பது தெரியவந்தது. கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். ராணுவ வீரர்இவருக்கு பானுப்பிரியா என்பருடன் திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
மகேஷகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால் மனைவி பானுப்பிரியா தனது இரண்டு மகன்கள் மற்றும் மாமனார் செல்லப்பன் மாமியார் காளியம்மாள் ஆகியோருடன் பாலகுறி பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் என்பவருடன் பானுப்பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை தாண்டிய உறவாக இருந்து வந்துள்ளது. இவர்களின் தகவல் பானுப்பிரியாவின் கணவரான ராணுவவீரர் மகேஷ்குமாருக்கு தெரிய வர ஜம்மு காஷ்மீரில் இருந்து விடுமுறையில் வந்த அவர் மனைவி பானுப்பிரியாவின் செல்போனை செக் செய்து பார்த்துள்ளார். மேலும் பூவரசனுக்கும் மனைவி பானுப்பிரியாவிக்கும் உள்ள உறவை உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மகேஷ்குமாருக்கும் மனைவி பானுப்பிரியாவிற்கும், பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்த பூவரசன் அன்று நள்ளிரவு 12 மணி அளவில் மகேஷ்குமாரின் வீட்டிற்குள் சென்று மகேஷ்குமாரையும், தடுக்க வந்த மகேஷ்குமாரின் தந்தையான செல்லப்பனையும் வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர்களை பெட்ஷீட்டில் கட்டி எடுத்துச் சென்று அருகில் உள்ள கொடுகூர் பகுதியிலும், வெப்பாலம்பட்டி பகுதியிலும் போட்டு தீ வைத்து எரித்துள்ளனர். இது குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து பானுப்பிரியா மற்றும் பூவரசன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


