மாதம் ரூ.10 ஆயிரம் வட்டி ஆசை காட்டி கோடிக்கணக்கில் வசூல்?கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவும் புதிய முதலீட்டு மோசடி!மக்களே உஷார்! உஷார்!!கிருஷ்ணகிரி

0
507

மாதம் ரூ.10 ஆயிரம் வட்டி ஆசை காட்டி கோடிக்கணக்கில் வசூல்?கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவும் புதிய முதலீட்டு மோசடி!மக்களே உஷார்! உஷார்!!

கிருஷ்ணகிரி, ஜூன் 10:கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டினம், ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், “ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி”, “பணம் இரட்டிப்பு”, “100 சதவீத பாதுகாப்பு”, “உறுதியான வருமானம்” போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடம் பெருமளவில் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக வங்கி, அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் அல்லது அரசால் அனுமதி பெற்ற முதலீட்டு திட்டங்கள் வழங்கும் வட்டியை விட பல மடங்கு அதிகமாக மாதம் 10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கூறி, எந்தவித சட்டப்பூர்வ ஆவணங்களும் வழங்காமல் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியளிக்கும் வகையில், சிலர் பெயரளவில் ஷேர் மார்க்கெட் ஆலோசனை மையம், முதலீட்டு ஆலோசனை நிறுவனம் அல்லது நிதி சேவை நிறுவனம் என்ற பெயரில் அலுவலகங்களை நடத்தி வருவதுடன், அதன் பின்னணியில் இந்த சட்டவிரோத முதலீட்டு திட்டங்கள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆரம்பத்தில் வட்டி வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தும் தந்திரம்இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யும் நபர்களுக்கு முதல் சில மாதங்கள் வட்டி தொகை முறையாக வழங்கப்படுவதால், அவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரையும் முதலீடு செய்ய தூண்டுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

நிதி நிபுணர்களின் கூற்றுப்படி,

இத்தகைய திட்டங்கள் பெரும்பாலும் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு வட்டியாக வழங்கும் “பான்சி” (Ponzi) முறையை ஒத்ததாக இருக்கும். ஒரு கட்டத்தில் புதிய முதலீடுகள் குறைந்துவிட்டால் திட்டம் முற்றிலும் சரிந்து, முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.’அய்யோ… அம்மா… பணம் போய்விட்டதே!’ என கதறும் நிலை ஏற்படுமா?தமிழகத்தில் கடந்த காலங்களில் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு மோசடிகள் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.”அதிக வட்டி தருகிறோம்” என்ற ஒரே காரணத்திற்காக, திட்டத்தின் சட்டபூர்வ நிலை, பதிவு விவரங்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி போன்றவற்றை சரிபார்க்காமல் பணத்தை முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.அரசு ஊழியர்களின் கருப்புப்பணம் முதலீடா?இந்த முதலீட்டு திட்டங்களில் சில அரசு ஊழியர்களும் பெருமளவில் பணம் முதலீடு செய்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக தங்களது சட்டவிரோத வருமானம் அல்லது கணக்கில் காட்டப்படாத பணத்தை அதிக லாபம் பெறும் நோக்கில் முதலீடு செய்து வருகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இத்தகைய முதலீட்டு திட்டங்களில் பணம் செலுத்திய அரசு ஊழியர்கள் யார்? அவர்களது முதலீட்டு பணத்தின் மூலாதாரம் என்ன? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

அமலாக்கத்துறை மற்றும் உளவுத்துறை விசாரணை அவசியம்பணமோசடி தடுப்பு சட்டம், வருமான வரி விதிமுறைகள், சட்டவிரோத நிதி சேகரிப்பு தடுப்பு சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய அமலாக்கத்துறை (ED), வருமான வரித்துறை, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அமைப்புகள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் இத்தகைய முதலீட்டு திட்டங்களின் உரிமையாளர்கள் யார்? அவர்கள் வசூலித்த மொத்த தொகை எவ்வளவு? முதலீட்டாளர்களுக்கு எந்த சட்டப்பூர்வ ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன? சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழிப்புணர்வே ஒரே பாதுகாப்புநிதி நிபுணர்கள் கூறுகையில், “சந்தை நிலவரத்தை விட பல மடங்கு அதிக வட்டி தருவதாக கூறும் எந்த திட்டத்தையும் மக்கள் சந்தேகத்துடன் அணுக வேண்டும். அரசு அங்கீகாரம், பதிவு எண், ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி, எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் ஆகியவை இல்லாத முதலீட்டு திட்டங்களில் பணம் செலுத்துவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளனர்.

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் ஏமாறாமல், முதலீடு செய்வதற்கு முன்பு முழுமையான தகவல்களை சரிபார்ப்பதே பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கும் ஒரே வழியாகும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here